செயற்கை நுண்ணறிவில் அசாத்திய ஆற்றல் கொண்ட சாட் ஜிபிடிக்கு இத்தாலியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் வாக்கில் செயற்கை நுண்ணறிவு பெற்ற சாட் ஜிபிடி பாட் அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் இந்த பாட் குறித்த பேச்சு உலக அளவில் வைரலானது. கட்டுரை எழுதவும், கவிதை எழுதவும், கோடிங் எழுதவும் என எண்ணற்ற பணிகளை இந்த பாட் செய்யும். அண்மையில் இந்தியாவில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளி ஒருவரின் ஜாமீன் மனுவையும் சாட் ஜிபிடி பரிசீலித்து பதில் சொல்லி இருந்தது. இப்படியாக அதன் பயன்பாடு நீள்கிறது.
என்னதான் அதன் சாதகங்கள் குறித்த பேச்சு வைரலாக இருந்தாலும் இதனால் உலகில் என்னென்ன நடக்குமோ என அதன் பாதகங்கள் குறித்த கேள்வியையும் சிலர் எழுப்பி வந்தனர். இந்நிலையில், உலக நாடுகளில் முதல் நாடாக இத்தாலி இதற்கு தடை விதித்துள்ளது. தனியுரிமை மற்றும் பிரைவாசி சார்ந்த பாதுகாப்பு காரணங்களுக்காக சாட் ஜிபிடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தற்காலிக தடைதான் என்றும் இதனை இத்தாலியின் டேட்டா பாதுகாப்பு ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பயனர்களிடமிருந்து அவர்களது தனிப்பட்ட தரவுகளை முறையற்ற முறையில் சேகரித்த காரணத்திற்காக இந்த தடையை சாட் ஜிபிடி இத்தாலியில் எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீதும் குற்றச்சாட்டு வைத்துள்ளது இத்தாலி. மேலும், சிறார்களும் இதனால் பாதிக்கப்படலாம் என சொல்லி உள்ளது. இது தொடர்பாக ஓபன் ஏஐ வசம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஓபன் ஏஐ சார்பில் இப்போதைக்கு சாட் ஜிபிடியை இத்தாலி நாட்டில் இணையதள பயனர்கள் பயன்படுத்தாத வகையில் தடை செய்யப்பட்டுள்ளதையும் உறுதி செய்துள்ளது.
No comments:
Post a Comment