ஸ்மார்ட் போன்களில் தமிழை உள்ளீடு செய்திட, முதன் முதலில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து வந்த செயலி 'செல்லினம்' ஆகும். மற்ற நிறுவனங்களின் செயலிகளை எளிதில் ஏற்றுக் கொள்ளாத ஆப்பிள் நிறுவனம், தன் ஆப்பிள் ஸ்மார்ட் போன்களிலும், ஐபேட் இயங்கு தளத்திலும் இதனை இணைத்து வெளியிட்டது. 2014 ஆம் ஆண்டு இந்த வகையில் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செல்லினம் இணைந்து வெளியானது. மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் வடிவமைத்த தமிழ் உள்ளீடு செயலி செல்லினம் ஆகும்.
சென்ற ஆகஸ்ட் 17 அன்று, ஆப்பிள் சாதனங்களுக்கான மேம்படுத்தப்பட்ட செல்லினம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உள்ள வசதிகளுடன் கூடுதலாகப் பல வசதிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் செல்லினம் இயக்கப்படுகையில், தவறான எழுத்துக் கோர்வையுடன் சொல் ஒன்றை உள்ளீடு செய்திட முயற்சிக்கையில், சரியான எழுத்துகளுடன், சொல் பரிந்துரைக்கப்படும். மேலும், ஒரு சொல் அமைக்கப்படுகையில் அடுத்து வரக் கூடிய சொற்கள் பரிந்துரைக்கப்படும். இந்த வசதிகள், ஏற்கனவே ஐ.ஓ.எஸ். சிஸ்டத்துடன் இணைந்த செல்லினத்தில், ஆங்கில சொற்களுக்கு மட்டும் தரப்பட்டிருந்தது. தற்போது தமிழ் உள்ளீடு செய்கையிலும் இந்த வசதிகள் இயக்கப்படுகின்றன.
மேலும், பயனர் இடைமுகங்கள் (User Interface) அமைப்பினை, நாம் விரும்பும் வண்ணத்தில் அமைத்துக் கொள்ளவும் வசதிகள் கிடைக்கின்றன.
இந்த புதிய ஐ.ஓ.எஸ். செல்லினம் பதிப்பில், செல்லினம் வலைமனை இணைக்கப்பட்டுள்ளது. இதில், மொபைல் சாதனங்களில் தமிழ் உள்ளீடு மற்றும் பயன்பாடு குறித்த கட்டுரைகள் வெளியிடப்படும். அவற்றை ஸ்மார்ட் போனிலும், தரவிறக்கம் செய்தும் படிக்கலாம்.
ஏற்கனவே, செல்லினத்தை இயக்கி வைத்திருப்பவர்களுக்கு தானாக புதிய செல்லினம் கொன்டு மேம்படுத்தப்படும். புதியதாக தேவைப்படுவோர், sellinam.help@gmail.com என்னும் முகவரிக்குத் தங்கள் தேவை குறித்து மின் அஞ்சல் அனுப்பினால், தரவிறக்கம் செய்வதற்கான குறியீடுகள் வழங்கப்படும்.
நன்றி : கம்பியூட்டர் மலர்
No comments:
Post a Comment