ரஷ்ய நிதி ஆதரவோடு போலிச் செய்தி பரப்புரை: அம்பலப்படுத்தியது ஃபேஸ்புக் - தமிழ் IT

Latest

Thursday, September 7, 2017

ரஷ்ய நிதி ஆதரவோடு போலிச் செய்தி பரப்புரை: அம்பலப்படுத்தியது ஃபேஸ்புக்

சமூக மற்றும் அரசியல் அளவில் பிரிவினைய ஏற்படுத்தும் செய்திகளை பரப்புவதற்கு ரஷ்யாவின் நிதி ஆதரவுடன் ஃபேஸ்புக் வலையமைப்பில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதனை கண்டறிய, கடந்த மே மாதம் 2017 ஆம் ஆண்டு வரையான 2 ஆண்டுகளுக்கு மேலான காலகட்டத்தில் வெளியான 3 ஆயிரம் விளம்பரங்கள் தொடர்பாக புலனாய்வு நடத்த ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு லட்சம் டாலர் செலவு செய்துள்ளதாக கூறியுள்ளது.

இந்த விளம்பரங்களில் எந்தவொரு அரசியல் பிரமுகர்களையும் குறிப்பிட்டு ஆதரவளிப்பாக தெரியவில்லை. மாறாக, குடிவரவு, இனம் மற்றும் சம உரிமை ஆகிய தலைப்புகளில் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் அமெரிக்கா நடத்தும் விசாரணைக்கு தாங்கள் ஒத்துழைத்ததாக, ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை பற்றி விசாரண நடத்தி வருகின்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் ராபர்ட் ம்யூலெரிடம் ஃபேஸ்புக் நிறுவனம் அதற்கு கிடைத்துள்ள சாட்சியங்களை வழங்குகிறது.

இந்த விளம்பரங்கள் போலி தகவல்களை பரப்புகின்ற 470 ஃபேஸ்புக் கணக்குகளுக்கு அல்லது ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் மீறுகின்ற இணைய பக்கங்களுக்கு ஃபேஸ்புக் பயனாளர்களை இட்டுசென்றுள்ளதாக அது கூறியுள்ளது.

இந்த விளம்பரங்களும், இணைய பக்கங்களும், பிரிவினை ஏற்படுத்தும் சமூக மற்றும் அரசியல் செய்திகளை மிகைப்படுத்தி பரப்புவதில் கவனம் செலுத்துபவையாக தோன்றுகின்றன என்று தன்னுடைய நிறுவனத்தின் வலைப்பூப்பதிவில் ஃபேஸ்புக் புதன்கிழமை பதிவிட்டுள்ளது.

சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், ரஷ்யாவுக்கு ஆதரவான செய்திகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றுவதாக அறியப்படும், செயின்ட் பீட்ஸ்பர்க்கை மையமாகக் கொண்டு செயல்படும் "இணைய ஆய்வு நிறுவனம்" என்று கூறப்படுகின்ற நிறுவனத்தால், இந்த இணைய பக்கங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன என்று நம்புவதாக ஃபேஸ்புக் தெரிவித்திருக்கிறது.

கேள்விக்குள்ளான ஃபேஸ்புக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸ் ஸ்டாமோஸ் மேலும் கூறியுள்ளார்.

இந்த பரப்புரை நடவடிக்கை வெளியானது எப்படி?

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, ஃபேஸ்புக் வலையமைப்பு எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நடத்தப்பட்ட இந்த நிறுவனத்தின் உள்ளக புலனாய்வில், இத்தகைய பரப்புரை நடத்தப்பட்டிருப்பது வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து வந்த நாட்களில் போலி செய்திகள் வெளியாகும் பிரச்சனையில் அக்கறை செலுத்தவில்லை என்று ஃபேஸ்புக் நிறுவனமும், அதனுடைய நிறுவனர் மார்க் சக்கர்பர்க்கும் தீவிர விமர்சனத்திற்கு உள்ளாயினர்.

ஃபேஸ்புக்கில் வெளியான "போலிச் செய்திகள்தான்" தேர்தலை வழிநடத்தியது என்ற கருத்து "பைத்தியகாரத்தனமானது" என்று மார்க் சக்கர்பர்க் நிராகரித்தார்.

புதன்கிழமை வெளியிடப்பட்ட பதிவில், இந்தப் பரப்புரை தெரியவந்தது எப்படி என்று ஸ்டாமோஸ் விவரங்களை பதிவிட்டுள்ளார்.

"(நாங்கள்) ரஷ்யாவில் தோன்றியிருக்கலாம் என்கிற விளம்பரங்களை தேடினோம். மிகவும் பலவீனமான இணைப்பு சமிக்ஞையுடையதாக இருந்தாலும், ஏற்கெனவே அறிய வந்துள்ள ஒருங்கிணைந்த முயற்சியோடு தொடர்பில்லாத விளம்பரங்களையும் தேடினோம்" என்று அவர் கூறியுள்ளார்.

"இதுவொரு மிகவும் விரிவான தேடல். அமெரிக்க ஐபி (IP) முகவரிகளோடு வந்திருந்த விளம்பரங்களும் இந்த தேடலில் இடம்பெற்றன. அவை எந்தவொரு கொள்கை அல்லது சட்டத்தை மீறாமல் இருந்தாலும், ரஷ்ய மொழியில் இருந்தவற்றில் இந்த தேடுதல் நடைபெற்றது" என்று அவர் கூறியுள்ளார்.

"எங்களுடைய மீளாய்வின் இந்தப் பகுதியில், சுமார் 50 ஆயிரம் டாலர் அளவுக்கு, அரசியல் தொடர்புக்கு சாத்தியம் இருக்கக்கூடிய தோராயமாக 2 ஆயிரத்து 200 விளம்பரங்களில் இந்த தொகை செலவிடப்பட்டுள்ளதை நாங்கள் கண்டறிந்தோம்" என்று ஸ்டாமோஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனம் அதனுடைய விளம்பர வரம்பை அதிகரிக்கிறது என்று குற்றஞ்சாட்டப்பட்ட அதே நாளில், ஃபேஸ்புக்கின் இந்த கண்டுபிடிப்பு செய்தியும் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள 18 முதல் 24 வயது வரையான 41 மில்லியன் இளைஞர்களை, ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் பங்காளி நிறுவனங்கள் சென்றடையும் சாத்தியம் இருப்பதாக 'த வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்' வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால், அமெரிக்காவின் மக்கள்தொகை பற்றிய அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, அந்நாட்டில் இந்த வயது வரம்புடையோர் மொத்தம் 31 மில்லியன் பேரே இருக்கின்றனர்.

ஃபேஸ்புக்கிற்கு மிகவும் தலைவலியை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த பிரச்சனையின் கனாகனம் மிகவும் குறைவு. ஆனால், இந்தப் பிரச்சனையை ஃபேஸ்புக் தொடர்ந்து அணுக வேண்டும் என்கிறார் ஆன்லைன் வர்த்தக நிபுணரான வழக்கறிஞர் ரிச்சர்ட் நியூமன்.
"சமூக ஊடக வெளியிலும், இணையதள விளம்பரத்திலும் ஃபேஸ்புக் மேலாதிக்க நிலையை தெளிவாக கொண்டுள்ளது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"போலிச் செய்திகள் கொள்கை தொடர்பாகவும், ஃபேஸ்புக் தளத்தில் வெளியாகும் விளம்பரங்களின் நம்பகத்தன்மையை அளவிடுவதற்கு முயல்வது தொடர்பாகவும். தடுப்பு நடவடிக்கைகளை இந்த நிறுவனம் எடுக்கின்ற வரை இதனை ஒரு பிரச்சனையாக நான் கருதவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

மூலம் ; பீ.பீ.சி.

No comments:

Post a Comment

Pages